8 மாசமா நடந்த 'போலி' போலீஸ் ஸ்டேஷன்.. "நம்பி COMPLAINT வேற குடுக்க போயிருக்காங்க".. போலீசாரையே தலை சுத்த வெச்ச 'சம்பவம்'!!
முகப்பு > செய்திகள் > இந்தியாபீகார் மாநிலம், பங்கா என்னும் பகுதியில், கடந்த 8 மாதங்களாக நடந்து வரும் சம்பவம் ஒன்று, போலீசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலத்தின் பங்கா பகுதியில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில், கடந்த எட்டு மாதங்களாக போலியாக போலீஸ் ஸ்டேஷன் ஒன்று இயங்கி வந்துள்ளது.
இது தொடர்பான தகவல், அப்பகுதியில் உள்ள போலீசார், ரெய்டு மேற்கொண்ட போது கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
உயர் அதிகாரி ஒருவர், சாலையில் சென்று கொண்டிருந்த போது ஒரு பெண் மற்றும் ஆண் என இரண்டு பேர், போலீஸ் உடையில் நின்று கொண்டிருந்ததை பார்த்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது, அவர்கள் கையில் இருந்த துப்பாக்கி, அதிகாரபூர்வ போலீஸ் துப்பாக்கியாக இல்லாமல், சாதாரண நாட்டுத் துப்பாக்கியாகவும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனால், போலீசாருக்கு சந்தேகம் எழவே, அவர்களை போலீசார் வசமாக பிடித்துள்ளனர்.
தொடர்ந்து, இது பற்றி அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது, பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 8 மாதங்களாக கட்டிடம் ஒன்றில் போலி போலீஸ் நிலையம் ஒன்றை ஒரு குழு நடத்தி வரும் நிலையில், அதன் மீது யாருக்குமே சந்தேகம் வரவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. போலா யாதவ் என்ற நபர் தான் இது அனைத்திற்கும் மாஸ்டர் பிளான் என்றும் கூறப்படுகிறது.
அது மட்டுமில்லாமல், இதனை நிஜ போலீஸ் ஸ்டேஷன் என எண்ணி, புகாரளிக்க வரும் நபர்களிடம் இருந்தும் அவர்கள் ஏராளமாக பணம் வசூல் செய்து மோசடி செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும், போலீஸ் உடையணிந்து நிஜ போலீஸ் போலவே அப்பகுதியில் இந்த கும்பல் வலம் வந்துள்ள நிலையில், போலீஸ் அதிகாரி போல நடிப்பதற்கு தினமும் அவர்களுக்கு 500 ரூபாய் சம்பளமும் வழங்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க, இங்கு போலீஸாக இருந்து வரும் ஒரு சிலர், தங்கள் நிஜ காவலர்கள் என்றும் நினைத்திருந்ததும், போலீசாரை இன்னும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. போலா யாதவ் என்ற அந்த நபர், சிலரிடம் ஒரு லட்சம் ரூபாய் வரை லஞ்சம் வாங்கி விட்டு, அவர்களுக்கு போலீஸ் வேலை வாங்கி தருவது போல, இந்த போலி ஸ்டேஷனில் வேலை போட்டு கொடுத்ததும் தெரிய வந்துள்ளது.
இதுவரை ஐந்து பேரை கைது செய்த காவல் துறை, போலி போலீஸ் ஸ்டேஷனுக்கு மூளையாக இருந்து, ஆட்களை போலீஸ் உடையில் நியமித்து, தற்போது தலைமறைவாகி உள்ள முக்கிய புள்ளியான போலா யாதவ் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பீகார் மாநிலத்தின் நகர பகுதியில், கடந்த 8 மாதங்களாக போலியாக காவல் நிலையம் நடந்ததும், அங்கே புகாரளிக்க கூட பொது மக்கள் வந்து சென்ற சம்பவமும், பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மற்ற செய்திகள்
