'மகனே...! இந்த அப்பாவ விட்டு போயிட்டியாடா...' 'மகன் தற்கொலை செய்ததால் ஆசிட் குடித்த அப்பா...' உள்ளத்தை கலங்க செய்யும் சோகம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅகமதாபாத்தில் 25 வயதுடைய இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை தாங்கிக் கொள்ள முடியாமல், அவரது தந்தையும் ஆசிட் குடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் ஒரு சில தொழில்கள் பின்னோக்கி செல்வதும் நாம் அறிந்ததே.
அகமதாபாத்தின் தால்தேஜ் புறநகரில் உள்ள நானோ பரோத்வாஸில் வசிக்கும் 25 வயதான ராஜ்வீர்சிங் கோஹில் என்பவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் வீட்டிலேயே இருந்துள்ளார். ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், அவருக்கு மூன்று மாதங்களுக்கு மேலாக ஒரு புதிய வேலை கிடைக்கவில்லை. இதனால் ஏற்கனவே இருந்த ஒரு நிதி நெருக்கடி அதிகமாகியுள்ளது, இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் ராஜ்வீர்சிங்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று, தனது வீட்டில் வேறு யாரும் இல்லாத போது வீட்டு அறையின் மேற்க்கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனை அறிந்த அவரின் குடும்பத்தார் கடும் சோகத்தில் உறைந்தனர். தன்னை தனியாக தவிக்க விட்டு சென்ற மகனின் மரணம் சாமுண்டா நகர் பகுதியில் வசித்து வந்த அவரது தந்தை மஹிபத்சிங் கோஹில் (55)-ஐ மிகவும் பாதித்தது. மகன் இறந்த அடுத்த நாள் சனிக்கிழமை பிற்பகலில் தீடீரென குளியல் அறைக்கு சென்று, அங்கிருந்த ஆசிட்டை எடுத்து குடித்துள்ளார்.
உடனடியாக சோலா சிவில் மருத்துவமனையில் மஹிபத்சிங் கோஹில்லை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மறுநாள் மதியம் உயிரை இழந்துள்ளார். தந்தை மகன் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் குடும்பத்தாரை மேலும் கவலையில் ஆழ்த்தியது.
குறிப்பு : தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
