பிரபல எழுத்தாளரும், நாடக நடிகரும், வசன கர்த்தாவுமான கிரேஸி மோகன் மாரடைப்பால் காலமானார்.

தமிழ் திரையுலகில் பிரபல காமெடி வசனம் எழுதும் வசனகர்த்தாவான ‘கிரேஸி மோகன்’ என்றழைக்கப்படும் மோகன் ரங்கமாச்சாரி(67), கிரேஸி கிரியேஷன்ஸ் எனும் நிறுவனத்தின் மூலம் பல நகைச்சுவை மேடை நாடகங்களுக்கு கதை எழுதி, இயக்கி, நடித்துள்ளார்.
நகைச்சுவை நாடகங்கள் மட்டுமின்றி டிவி சீரியல்களிலும் பணியாற்றியுள்ளார். உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘அவ்வை சண்முகி’, ‘சதிலீலாவதி’, ‘பஞ்சதந்திரம்’, ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’, ‘காதலா காதலா’ உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். சுமார் 70-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடங்களிலும் நடித்துள்ளார்.
கிரேஸி மோகனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கிரேஸி மோகனின் மரணத்திற்கு திரையுலக பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அவரது இழப்பு திரை மற்றும் நாடகத்துறைக்கு மிகப்பெரிய இழப்பாக கருதப்படுகிறது.