நடிகை பாம்பே ஞானம் இயக்கும் ‘பிரம்மாண்ட நாயகன்’ படம்! .. ‘திருப்பதி தேவஸ்தானம்’ வாழ்த்து!
முகப்பு > சினிமா செய்திகள்தமிழ் மற்றும் தெலுங்கிலும் திரைப்படமாக உருவாகிறது திருப்பதி வெங்கடாஜலபதி மற்றும் பகவான் பாலாஜியின் புராண வரலாறு.

சீனிவாசப் பெருமாள் எப்படி திருப்பதி வெங்கடாஜலபதி ஆனார் என்பதை விளக்கும் வகையில் உருவாகும் இந்தப் படத்தில் திருப்பதி வெங்கடாஜலபதி, ஸ்ரீனிவாசன், வேதவன், மகா விஷ்ணு ஆகிய வேடங்களில் ஆரியன் ஷாம் நடித்திருக்கிறார். இந்தப் படத்திற்காக முழுமையாக விரதம் இருந்து இந்த திருப்பதி பாலாஜி வேடத்தை ஆரியன் ஷாம் ஏற்று நடித்திருக்கிறார்.
நாயகன் ஆர்யன் ஷாம், விரைவில் வெளிவரவிருக்கும் ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் வழங்கும் ‘அந்த நாள்’ எனும் திரைப்படத்தில் நடிக்கிறார். இவர் இந்தியன் வங்கியின் நிறுவனர் மறைந்த கிருஷ்ணசாமியின் கொள்ளுப் பேரன் ஆவார். அவர் சுவாமி விவேகானந்தரின் புகழ்பெற்ற சிகாகோ பயணத்திற்கு முழு நிதி உதவியின் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அங்கு இந்து மதத்தை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தினார்.
இந்தத் திரைப்படத்தை கலைமாமணி விருது பெற்ற நடிகை ஞானம் பாலசுப்பிரமணியம் (என்கிற பாம்பே ஞானம்) இயக்கியிருக்கிறார். நடிகை பாம்பே ஞானம் ஆஹா, நளதமயந்தி, அழகிய தமிழ் மகன், ஜிகர்தண்டா உள்ளிட்ட திரைப்படங்களிலும் கோலங்கள், சிதம்பர ரகசியம் உள்ளிட்ட புகழ்பெற்ற சீரியல்களிலும் நடித்தவர். இவர் சீரடி சாய்பாபா, ரமண மகரிஷி, ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற இந்தியாவின் தலைச்சிறந்த மகான்கள் பற்றி பல நாடகங்களை நடத்தியவர்.
இந்நிலையில் பிரம்மாண்ட நாயகன் பக்தி படத்தில் ஸ்ரீசினிவாச பெருமாள் வேடத்தில் நடித்த ஆர்யன் ஷாம் , இயக்குனர் கலைமாமணிஞானம் பாலசுப்ரமணியம் அவர்களுக்கும் திருப்பதி தேவஸ்தானம் வாழ்த்தி பாராட்டுக் கடிதம் அனுப்பியிருக்கிறது. அதாவது, திருப்பதியின் வரலாறு மற்றும் இறைவன் திருப்பதி வெங்கடாசலபதியின் வாழ்க்கை வரலாறு பற்றிய இரு மொழி திரைப்படமான இந்த படத்துக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியம், மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர்களில் ஒருவரான திரு.துஸ்மாந்த குமார்தாஸ், திரைப்படத்தின் சில காட்சிகளைப் பார்த்த பிறகு, திருப்பதி வெங்கடாஜலபதி கடவுளாக நடித்த இளம் நடிகர் ஆர்யன் ஷ்யாமை தனிப்பட்ட முறையில் அழைத்து வாழ்த்தினார் மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியம் சார்பாக ஒரு கடிதத்தை அனுப்பினார்.
அதில் இளம் நடிகர் ஆர்யன் ஷ்யாம், மற்றும் இயக்குனர் திருமதி ஞானம் பாலசுப்ரமணியம் (பம்பாய் ஞானம்) மற்றும் பிரமாண்ட நாயகன் திரைப்படத்தின் முழு படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியத்தின் உறுப்பினர்களில் ஒருவரான திரு.துஸ்மாந்த குமார்தாஸ், ஆந்திர மாநில ஆளுநர் திரு.பிஷ்வபூஷன் ஹரிச்சந்தனின் மருமகன் ஆவார்.
தவிர, இப்படத்தில் மகாலட்சுமியாக அதிதியும், பத்மாவதி தேவியாக சந்தியாஸ்ரீயும் நடித்திருக்கிறார்கள். இந்தப்படத்தின் ஒளிப்பதிவை எஸ். ஆனந்த்பாபு கவனித்திருக்கிறார். திவாகர் சுப்பிரமணியம் இசையமைத்திருக்கிறார். கிரியேட்டிவ் தலைவராக மோகன் பாபு பொறுப்பேற்றுள்ளார்.