இயக்குனரும் சின்னத்திரை நடிகருமான ராஜசேகர் காலமானார்!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Sep 08, 2019 06:03 PM
தமிழ் திரைப்பட இயக்குநரும் தொலைக்காட்சி சீரியல் நடிகருமான ராஜசேகர் காலமானார்.

'பாலைவனச் சோலை' படத்தை இயக்கிய இரட்டையர் இயக்குநர்களான ராபர்ட் - ராஜசேகரில் ஒருவர் இயக்குநர் ராஜசேகர். இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார்.
பாரதிராஜாவின் 'நிழல்கள்' படத்தில் 4 ஹீரோக்களில் ஒருவராக நடித்துள்ளார் ராஜசேகர். இது ஒரு பொன்மாலைப் பொழுது என்ற பாடலில் நடித்திருப்பார் ராஜசேகர்.
ராபர்ட்டுடன் இவர் இணைந்து, ரபார்ட் - ராஜசேகர் என்ற பெயரில், 'மனசுக்குள் மத்தாப்பூ', 'சின்னப்பூவே மெல்லப் பேசு', 'தூரம் அதிகமில்லை', 'பறவைகள் பலவிதம்', 'தூரத்துப் பச்சை', 'கல்யாணக் காலம்' உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கிறார்.
பல படங்களில் சப்போர்ட்டிங் கேரக்டரில் நடித்திருக்கிறார் ராஜசேகர். சினிமா மட்டுமின்றி பல்வேறு தொலைக்காட்சி சீரியல்களிலும் முக்கியமான வேடங்களில் நடித்து வந்தார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் இவரது கேரக்டர் பெரிதும் பேசப்பட்டது. சின்னத்திரை சங்கங்களிலும் பொறுப்பு வகித்து வந்தார் ராஜசேகர்.
சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் ராஜசேகர் சென்னை போரூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று காலை அவர் உயிரிழந்தார்.