திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடனான சந்திப்பு குறித்த வதந்திகளுக்கு நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

சத்யராஜின் மகள் திவ்யா, இந்தியாவில் உள்ள டாப் நியூட்ரிஷனிஸ்ட்களில் ஒருவர். சென்னை மாநாகராட்சியுடன் இணைந்து அட்சய பாத்திரம் என்ற அறக்கட்டளை மூலம், அரசு பள்ளி மாண்வர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் திட்டத்தை சமீபத்தில் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திவ்யா சத்யாராஜ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இதையடுத்து, திவ்யா சத்யராஜ் திமுக-வில் இணையவிருப்பதாக தகவல்கள் பரவின.
இது குறித்து திவ்யா சத்யராஜ் விளக்கம் அளித்துள்ளார். ‘கலைஞரின் இயக்கத்தில் அப்பா நடித்த போதிலிருந்தே இரு குடும்பமும் நட்புடன் பழகி வருகிறோம். மு.க.ஸ்டாலின் அவர்களுடனான சந்திப்பு சாதாராணமான ஒன்று தான். நியூட்ரிஷனிஸ்ட்டாக எனது தொழில் பற்றியும், தமிழகத்தில் குழந்தைகளின் ஊட்டச்சத்து வளர்ச்சி குறித்தும் பேசினேன்.
அவர் மிகவும் ஊக்கப்படுத்தினார். அவர் மீதும் அவரது அரசியல் பயணத்தின் மீதும் எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அரசியலில் எனக்கு ஆர்வம் இருக்கு ஆனால் இந்த சந்திப்பில் அரசியல் குறித்து நாங்கள் எதுவும் பேசவில்லை என திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே திவ்யா சத்யராஜ் கம்யூனிஸ்ட் கட்சியில் இணையவிருப்பதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்த அவர், மனதால் நான் ஒரு கம்யூனிஸ்ட். கம்யூனிஸம்தான் சமத்துவத்தைக் கட்டமைக்கும், சுரண்டலைத் தடுக்கும் என குறிப்பிட்டிருந்தார்.
சில வெளிநாட்டு மருந்து நிறுவனங்கள், உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ஊட்டச்சத்து மருந்துகளை நோயாளிகளுக்கு பரிந்துரைக்கும்படி தனக்கு லஞ்சம் கொடுத்ததாக தெரிவித்த திவ்யா, இதுபோன்ற அங்கீகரிக்கப்படாத ஊட்டச்சத்து மருந்துகளை தடை செய்ய வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.