தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 18 அன்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளிடையே கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி சமூகத்தில் பிரபலமான சினிமா மற்றும் விளையாட்டு வீரர்களிடம் அனைவரரையும் வாக்களிக்க வலியுறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பாக விராட் கோலி, எம்எஸ் தோனி, லதா மங்கேஸ்கர், சங்கர் மகாதேவன், நடிகர்கள், வருண் தவான், விக்கி கௌசல், ரன்வீர் சிங் அனுஷ்கா ஷர்மா, தீபிகா படுகோன் ஆகியோரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதன் ஒரு பகுதியாக சமீபத்தில் அவரின் ட்விட்டர் பதிவில், சச்சின், லதா மங்கேஸ்கர், ஏ.ஆர்.ரஹ்மான், பேசினால் நாடு கேட்கும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மக்களை வாக்களிக்க வலியுறுத்துமாறு நான் இந்த பிரபலங்களை பணிவாக கேட்டுக்கொள்கிறேன்' என்றார்.
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான், கண்டிப்பாக செய்வோம் ஜி. நன்றி என பதிலுளித்துள்ளார். பிரதமர் மோடியின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.