'பொள்ளாச்சி பாலியல் வழக்கு'.. திருநாவுக்கரசுக்கு ஜாமின் கோரிய தாய்.. நீதிமன்றம் மறுப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Mar 12, 2019 01:23 PM

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசுக்கு ஜாமின் கோரிய அவரது தாயாரின் மனுவை பொள்ளாச்சி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Pollachi issue thirunavukkarasu bail petition rejected

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஒரு கும்பல் கல்லூரி மாணிவிகள், பணிக்கு செல்லும் பெண்கள் என 100 -க்கும் மேற்பட்ட பெண்களிடம் முகநூலின் மூலம் பழகி பின்னர் காதலிப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோவாக எடுத்து அப்பெண்களை மிரட்டி வந்துள்ளனர்.

இந்த கொடூர செயலில் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட பின்னர்தான் இந்த சம்பவம் வெளியே தெரிந்துள்ளது. இதனை அடுத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், பொள்ளாச்சி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த சபரிநாதன்(25) அவரது நண்பர்களான திருநாவுக்கரசு(25), சதீஷ்(28), வசந்தக்குமார்(27) ஆகிய நால்வரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

இதனை அடுத்து புகார் அளித்த பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரரைத் தாக்கிய செந்தில்(33), பாபு(26), வசந்தக்குமார்(26) உள்ளிட்டோரையும் காவல் துறையினர் கைது செய்தனர். பின் இவர்களிடமிருந்து கைப்பற்றிய செல்போன்களை பார்வையிட்டதில் பல பெண்களை மிரட்டி ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த கொடூர சம்பவத்துக்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வந்ததை அடுத்து, திருநாவுக்கரசு உட்பட நான்கு குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கோவை ஆட்சியர் உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசுக்கு ஜாமின் வழங்க கோரி அவரது தாயார் பொள்ளாச்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்

Tags : #POLLACHIASSAULTCASE #SEXUALABUSE #POLLACHIABUSE