“அடக்கம் செய்ய கூட இடமில்லை!”.. இறந்தும் துரத்தும் கொரோனா துயரம்.. கலங்கி நிற்கும் இத்தாலி!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா என்னும் கொடிய வைரஸ் நோயின் பிறப்பிடம் சீனாவாக இருந்தாலும் இந்த நோயின் தாக்கம் வெகு விரைவாக உலகத்தின் பிற நாடுகளுக்கும் பரவியது. இதில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள நாடாக இத்தாலி கருதப்படுகிறது.

இத்தாலியில் கொரோனா பாதிப்பால் ஒவ்வொருநாளும் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்து வரும் சம்பவங்கள் உலகையே அதிரவைத்த வருகின்றன. சீனாவை விட குறைவான நபர்களே இத்தாலியில் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் சீனாவை விட இருமடங்காக இத்தாலியில் கொரோனாவுக்கு மக்கள் பலியாகியுள்ளனர். குறிப்பாக மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் இத்தாலியில் அதிகமாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். இதைத்தவிர மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள் குறைவாக இருப்பதாகவும் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
இவை எல்லாவற்றையும் விட கொடுமையான விஷயம் என்னவென்றால் இத்தகைய கொடிய சூழலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு கூட சாந்தி கிட்டவில்லை என்கிற துயரமான நிலை இத்தாலியில் உண்டாகியுள்ளது. ஆம் இத்தாலியின் முக்கிய நகரமொன்றில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு போதிய இடம் இல்லாததால் சடலங்களை சவப்பெட்டியில் எடுத்துக்கொண்டு ராணுவ வண்டிகள் நகரங்களை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றன.
இத்தாலியின் இந்த நிலை பிரிட்டனையே அதிர வைத்துள்ளது. இதுபற்றி பேசிய இத்தாலியை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் இத்தாலி என்ன தவறுகள் செய்ததோ அதே தவறுகளை பிரிட்டன் செய்வதால் இத்தாலியை விட மிக மோசமான நிலைக்கு பிரிட்டனும் தள்ளப்படலாம் என்று தெரிவித்துள்ளார். எனினும் மக்கள் நடமாடுவதற்கு தடை, தனிமைப்படுத்துதல், பள்ளிகள் உள்ளிட்டவை மூடப்படுதல் உள்ளிட்டவற்றின் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை இத்தாலி மேற்கொண்டு வருகிறது.
