'அந்த வீடியோவுல இருக்குறது நீங்கதானா?'.. 'வீடியோவ பாக்குறீங்களா?'.. அசரவைக்கும் கேள்விகள்.. அசராத பதில்கள்.. 'நாஞ்சில் சம்பத்' பிரத்யேக பேட்டி.. வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Oct 01, 2019 11:38 AM

அரசியல் பிரபலமாக இருந்தவரும் பேச்சாளருமான நாஞ்சில் சம்பத், பெண் ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ ஒன்று வெளியானதாக வந்த தகவல்களை அடுத்து, நாஞ்சில் சம்பத் அவர்களிடம் பிஹைண்ட்வுட்ஸ் பிரத்யேக நேர்காணல் செய்துள்ளது.

TN Speaker Nanjil Sampath opens up about video controversy

இந்த பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களின் சுருக்கம்:

சமீபத்தில் வைரலான அந்த வீடியோவை நீங்க பாத்தீங்களா?

நான் பாக்கல.

பாக்குறீங்களா?

பாக்க மாட்டேன்.

அந்த வீடியோவில் ஒரு அறைக்குள் ஒரு பெண் இருக்காங்க. அந்த பெண்ணுடன் இன்னொருத்தர் வர்றார். ரெண்டு பேரும் மது அருந்துவது போல் காட்சிகள் இருக்கு? அதில் இருப்பது நீங்கதானா? இதற்கு உங்கள் பதில் என்ன?

நான் இல்லயே.. ஏதோ அர்த்த ராத்திரியில் சாட்சி இல்லாமல் பிறந்த பயல்கள். என்னை அழுக்காக்க முயற்சித்திருக்கிறார்கள். நான் நல்லவன் என நிரூபிக்க யாரிடத்திலும் அத்தாட்சி பெறவேண்டியதில்லை. நான் எனக்கு உண்மையாக இருக்கிறேன். நான் உயர்ந்த வானத்தின் உச்சியில் பறக்கிற பறவை. புலிவேட்டைக்கு புறப்பட்டவன் நான், எலிகளைப் பற்றி எனக்கு கவலையில்லை. என்னை எந்த இடத்திலும் நான் தாழ்த்திக்கொண்டதில்லை. நான் 100 சதவீதம் சுயமரியாதைக்காரன். யாரும் முகம் சுழிக்கும்படி எப்போதும் நடக்க மாட்டேன்.

அந்த வீடியோ உண்மைதான் என்றாலும், அதுல இருப்பது நீங்கதான்னு சொன்னதற்கு என்ன பின்னணி காரணமாக இருக்கும்னு நெனைக்கிறீங்க.?

என்ன காரணம்? நான் யாரையும் பகைத்துக்கொள்ளவில்லை. யாரிடத்திலும் அரசியல் செய்யவில்லை. யார் சொத்தையும் அபகரிக்கவில்லை. யார் கனவிலும் கல்லெறியவில்லை. எனக்கென்று விதிக்கப்பட்ட தமிழ்வெளியில் நான் பயணிக்கிறேன். இது சமூக வலைதளத்தின் சாபக்கேடு. கோபுரத்தின் மீது கல்லெறிவார்கள். ஆகாயத்தை அழுக்காக்கும் முயற்சி இது. நான் ஆகாயம் அல்ல, நெருப்பு. கரையான் என்னை நெருங்காது.

சமீபத்தில் சில கட்சிகளின் ஐடி குழு, தங்களுக்கு எதிரானவர்களின் தனிப்பட்ட வீடியோக்களை வெளியிடுவதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் சார்ந்த யாராவது இப்படி செய்திருப்பார்கள் என யார் மீதேனும் சந்தேகம் இருக்கா?

எனக்கு அப்படி சந்தேகம் இல்லை. நான் தனிப்பட்ட முறையில் எந்த கட்சியையும் ஏற்றுக்கொள்ளவில்லை. கொள்கை சார்ந்துதான் கட்சிகளை ஏற்கிறேன். நான் எந்த கட்சியையும் பகைக்கவில்லை. அதிமுகவில் இருந்து நான் வெளியேறவில்லை. வெளியேற்றினார். ஆனால் இப்படி வேண்டுமென்றே பண்றாங்கன்னா அவனுக்கு மூளைக்கோளாறு. அவங்கள கீழ்ப்பாக்கத்துலதான் சேக்கணும். என் மேல எந்தத் தவறும் இல்ல.

உங்களை யாரேனும் மிரட்டப் பாக்குறாங்களா?அரசியல்ல உங்களை ஓரங்கட்டி, உங்களுக்கு இருக்கும் தமிழர் என்கிற அடையாளத்தை சிதைக்க நெனைக்கிறீங்களா?

என்ன ஒரு பயலும் மிரட்ட முடியாது. நான் திருமறையை படிச்சுட்டு வந்தவன். நான் அரசியல்லயே இல்லை, என்ன எப்படி ஓரங்கட்ட முடியும்? என் அடையாளத்தை யாரும் அழிக்க முடியாது. நான் நெருப்பு. நான் யாருக்கும் பதில் சொல்லவேண்டியதில்லை. நான் கட்சிக்காரன் இல்லை. கொள்கைக்காரனாகவே இருந்திருக்கிறேன்.

இந்த விஷயத்தில் உங்களிடம் மோதுபவர்களுக்கு பின்புலம் வலுவாக இருக்கிறதோ?

எந்த பின்புலம். நான் மொடியை எதிர்த்து கேள்வி கேட்டிருக்கேன் அதிமுகவை எதிர்த்து கேள்வி கேட்டிருக்கேன். டிடிவி தினகரனுக்கு எதிரா பேசியிருக்கேன். இதுக்கு எதிராக எதாவது பண்ணனும்னா பண்ணிட்டு போறாங்க. என்னிடம் இந்த தகவலை ஒருவர் சொன்னதுமே, என்னை களங்கப்படுத்த முடியாது என்று நான் சமூக வலைதளத்தில் பதிவிட்டேன்.

அப்போ அந்த வீடியோவில் இருப்பது நீங்க இல்ல? உங்களுக்கு குடிப்பழக்கம் இருக்கா?

எனக்கு எந்த பழக்கமும் இல்ல. அந்த வீடியோவ நான் பாக்கல. அப்படி ஒரு வீடியோவே கெடையாது. நான் பாக்க மாட்டேன். நான் சமூக வலைதளங்களை பாக்கல. என் மீது வருபவற்றை நான் தாங்கிக்கொண்டுதான் இருந்தேன். நான் ஒடஞ்சு போகல. நான் உற்சாகமாகத்தான் இருக்கேன்.

இதுபற்றி புகார் அளித்தீங்களா?

எனக்கு அதுக்கு நேரம் இல்லை. அது என் வேலை கெடையாது. ஊடகங்களுக்கு வெளிச்சம் வேணும்னா நான் தேவைப்படும், எனக்கு ஊடகங்கள் தேவையில்லை.குறைக்கிற நாய்களுக்கு எல்லாம் பதில் சொல்லிட்டு இருக்க முடியாது. என் மீது அவதூறு வரத்தான் செய்யும். காய்க்கிற மரத்தின் மீதுதான் கல்லடி விழும்.

சமீபத்தில் கீழடி அகழ்வாராய்ச்சி நடக்குது? இதற்கு முன் மத்திய அரசு அனுமதிக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு வந்தது. இதற்கும் தற்போது ஆய்வு நடப்பதற்கும் உள்ள தொடர்பு என்ன?

கீழடியில், நாம் காலடிக்கு கீழே காணாமல் போனவற்றை கண்டறியலாம். உலகில் முதன் முதலில் தோன்றியவர்கள் தமிழர்கள். நாகரிகத்துக்கு தொட்டில் கட்டியவர்கள் தமிழர்கள். பண்பாட்டு சிறப்பும் கோபுரப் பெருமையும் உடையவர்கள் தமிழர்கள் என்பதற்கான சாட்சிகள் கிடைத்துள்ளன. தமிழர்கள் இனிமேல் பெருமிதமாக நடைபோடலாம். 15 ஆயிரத்து 500 பொருட்கள் கிடைத்திருக்கின்றன. அந்த ஆய்வை முறைப்படி செய்யவிடாமல் மத்திய அரசு தடுத்த காரியங்கள் எல்லாம் கடந்த காலத்தில் அரங்கேறின. எல்லா சவால்களையும் சந்தித்து, இன்றைக்கு கீழடியில் தமிழர்களின் நாகரிகம் புதைந்து கிடப்பது தரணியில் வெளிச்சமாகியிருக்கிறது. அந்த செய்தி வந்த தருணத்தில் எனக்கு ஒரு உந்துதல் கிடைத்திருக்கிறது. நான் பூவாக மலர்கிறேன். புதிய நம்பிக்கை கிடைத்திருக்கிறது!

Tags : #NANJIL SAMPATH #INTERVIEW