தர்காவில் ஏற்றப்பட்ட கார்த்திகை தீபம்.. சுடர்விட்ட மத நல்லிணக்கம்.. நெகிழ வச்ச கிராம மக்கள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் உள்ள தர்கா ஒன்றில் பல ஆண்டுகளாக மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.
![Karthigai Deepam celebrated in Dargah Near Avinasi Karthigai Deepam celebrated in Dargah Near Avinasi](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/karthigai-deepam-celebrated-in-dargah-near-avinasi.jpg)
கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை தீப திருநாளில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் அகல் விளக்குகளை ஏற்றி வழிபாடு நடத்துவர். ஒரு சிலர் கார்த்திகை மாதம் முழுவதும் தங்களது வீடுகளில் விளக்குகளை ஏற்றியும் வருகின்றனர். இந்நிலையில், பல ஆண்டுகளாக தர்கா ஒன்றில் கார்த்திகை தீப திருநாளில் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு வருகின்றன.
அவிநாசி வட்டம் சேவூர் அருகே கானூர் ஊராட்சி உள்ளது. இங்கு உள்ள தக்னி சுன்னத் ஜமாத் மஸ்ஜித் முஹம்மத் ஷா வலி தர்கா மிகவும் புகழ்பெற்றதாகும். வக்பு வாரியதுடன் இணைக்கப்பட்ட இந்த தர்காவில் ஆண்டுதோறும் சந்தனக்கூடு உருஷ் விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும். அப்போது தமிழகம் மட்டும் அல்லது கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் மக்கள் இந்த பண்டிகையில் திரளாக கலந்துகொள்வர்.
அதேபோல, ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மகா தீபத்திருநாள் அன்று அக்கம் பக்கத்தினர் இந்த தர்காவில் அகல் விளக்குகளை ஏற்றுகின்றனர். இது பல ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கின்றனர் உள்ளூர் மக்கள். பொதுவாக இந்த தர்காவில் தொழில் விருத்தி, திருமணம், குழந்தை பாக்கியம் என எந்தவொரு வேண்டுதல் வைத்தாலும் நிறைவேறிவிடுவதால் ஜாதி, மதங்களை கடந்து மக்கள் இந்த தர்காவிற்கு வந்து செல்வதாக கூறுகிறார் தர்காவின் ஹஜ்ரத் சம்சுதீன்.
மேலும், மத நல்லிணக்கத்திற்கு இந்த தர்கா சிறந்த உதாரணமாக விளங்குவதாகவும் ஆண்டுதோறும் நடைபெறும் சந்தனக்கூடு உருஷ் விழாவில் அனைத்து தரப்பு மக்களும் வருகை தந்து வழிபட்டு செல்வதாகவும் சம்சுதீன் தெரிவித்திருக்கிறார். மதங்களை கடந்து ஒற்றுமையுடன் பல ஆண்டுகளாக தொடர்ந்துவரும் இந்த நடைமுறை பலரையும் நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)