இன்றைய ‘முக்கிய’ செய்திகள்... ‘எக்ஸ்பிரஸ்’ வேகத்தில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Aug 26, 2019 07:18 PM

இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. செய்திகளின் தொகுப்பு பின்வருமாறு:-

Headlines of news today: Read some important news ahead

1. பிரான்சில் நடைபெற்று வரும் ஜி7 உச்சிமாநாட்டில், இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பில் காஷ்மீர் விவகாரம், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் இருதரப்புரீதியாக தீர்க்கப்பட வேண்டும் என்று அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.

2. ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்ட நிலையில், முன்ஜாமீன் மனு அர்த்தமற்றதாகக் கூறி உச்சநீதிமன்றம் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. இதற்கிடையே, ப.சிதம்பரத்தின், சிபிஐ காவலை, மேலும் 5 நாள் நீட்டித்து, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3. நாடு முழுவதும் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள் மட்டுமல்லாது, விமான நிலையங்கள், மாநில அரசு போக்குவரத்து கழகங்களின் கட்டுப்பாட்டிலுள்ள பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்களிலும் உள்ள தேநீர் கடைகளில் மண்குவளைகளை கட்டாயமாக்க பரிந்துரை செய்வதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

4. கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி கவிழ்வதற்கு ம.ஜ.தளம் தலைவர் குமாரசாமி தான் காரணம் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் சித்தராமையா புகார் கூறியிருந்தார். இந்நிலையில் முதலமைச்சராக இருந்தபோது, என்னை குமாஸ்தா போல காங்கிரஸ் நடத்தியது என குமாரசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

5. முதல்வர் பழனிச்சாமி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி, வரும் 28-ம் தேதி சென்னையில் இருந்து புறப்படும் அவர், செப்டம்பர் 10-ம் தேதி மீண்டும் தமிழகம் திரும்ப உள்ளார்.

6. சென்னையில் புதிய மின்சாரப்பேருந்து தொடங்கப்பட்டுள்ளது. சோதனை ஓட்டமாகவே இந்த பேருந்து இயக்கப்படுகிறது. சில நாட்களில் மற்றொரு பேருந்தும் பயணிகள் சேவைக்கு விடப்பட்டு சோதனை மேற்கொள்ளப்படும்.

7. மாணவர்களின் கல்வி மேம்பாட்டை கருத்தில் கொண்டு, தமிழக அரசு கல்வி தொலைக்காட்சி சேவையை தொடங்கியுள்ளது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் விழா நடைபெற்றது.

8. ராசிபுரம் அருகே அருந்ததியர் இனமக்களுக்கு 3 சதவீதம் இட ஒதுக்கீடு பெற்றுதந்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு கோவில் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது.

9. காஞ்சிபுரம் மாவட்டம் மானம்பதி பகுதியில் கங்கையம்மன் கோவில் அருகே மர்ம பொருள் வெடித்த விபத்தில், ஒருவர் உயிரிழந்தநிலையில், சிகிச்சை பெற்று வந்த மற்றொருவர் உயிரிழந்தார்.

9. வேதாரண்யத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் நேற்று அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. இந்த சம்பவத்துக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், வேதாரண்யத்தில் இடிக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய சிலை நிறுவப்பட்டது.

10. தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 27-ம்  வருகிறது. இதையொட்டி அக்டோபர் 25-ம் தேதி சொந்த ஊர் செல்பவர்களுக்காக, அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடங்குகிறது.

11. மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில், தென் மற்றும் மத்திய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

12. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சவரனுக்கு ரூ.304 உயர்ந்து, ரூ.29,744 ஆக விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.38 அதிகரித்து ரூ.3,718 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

13.BWF பாரா பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் மானஸி முதன்முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

14. டெஸ்ட் கிரிக்கெட்டில் நான்காவது இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த மூன்றாவது வீரர் என்ற சாதனையை பென் ஸ்டோக்ஸ் நிகழ்த்தியுள்ளார்.

15. இந்தோனேசியாவில் இயற்கை பேரழிவுகள் குறைவாக உள்ள கிழக்கு கலிமன்டான் மாகாணத்தில் உள்ள போர்னியோ தீவு, புதிய தலைநகராக தேர்ந்தெடுக்கப்பபட்டுள்ளது என அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ தெரிவித்துள்ளார்.

Tags : #IMPORTANCE #HEADLINES