"தோனி தான் இனி 'CSK' ஓப்பனர்?.." ஆசைப்படும் முன்னாள் 'சென்னை' வீரர்.. அப்படி நடந்தா என்ன ஆகும் தெரியுமா?
முகப்பு > செய்திகள் > விளையாட்டு15 ஆவது ஐபிஎல் தொடரில், ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை ஆடிய நான்கு போட்டிகளிலும் தோல்வி அடைந்து, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
![parthiv patel wants ms dhoni to open for csk parthiv patel wants ms dhoni to open for csk](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/parthiv-patel-wants-ms-dhoni-to-open-for-csk.jpg)
கடந்த முறை ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றி அசத்தி இருந்த சிஎஸ்கே, இந்த முறை பேட்டிங், பீல்டிங் மற்றும் பவுலிங் என அனைத்திலும் தடுமாறி வருகிறது.
தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகிக் கொண்டதால், சிஎஸ்கேவை ஜடேஜா தலைமை தாங்கி வருகிறார். கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் போட்டியில், அனைவரும் ரன் அடிக்க திணற, தோனி மட்டும் அரை சதமடித்திருந்தார்.
தொடர்ந்து சொதப்பல்
தொடர்ந்து, லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 210 ரன்கள் அடித்தும், மோசமான பவுலிங் மற்றும் ஃபீல்டிங் காரணமாக தோல்வியை தழுவும் நிலை ஏற்பட்டது. இதற்கு அடுத்தபடியாக, பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு எதிரான போட்டியிலும் இதே நிலை தான். கடந்த முறை, ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தது, அந்த அணியின் தொடக்க ஜோடி.
பாப் டு பிளெஸ்ஸிஸ் மற்றும் ருத்துராஜ் ஆகியோர், 600 ரன்களுக்கு மேல் அடித்து, கடந்த சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில், முதல் இரண்டு இடங்களையும் அவர்கள் பிடித்திருந்தனர். ஆனால், இந்த முறை டு பிளெஸ்ஸிஸ் பெங்களூர் அணியில் ஆடி வர, நான்கு போட்டிகளிலும் சென்னை அணியின் தொடக்க ஜோடி பெரிதாக பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை.
விமர்சனத்தை சந்திக்கும் ருத்துராஜ்
இதற்கு மிக முக்கிய காரணம், ருத்துராஜ் தான். இதுவரை ஆடியுள்ள நான்கு போட்டிகளில் முறையே 0,1,1 மற்றும் 16 ரன்களை அவர் எடுத்து அதிக விமர்சனத்தினை சந்தித்து வருகிறார். இதனால், இனிவரும் போட்டிகளில் அவரது இடத்திற்கு நெருக்கடி ஏற்படும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் சிஎஸ்கே வீரரான பார்த்தீவ் படேல், தோனி தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளார்.
தொடக்க வீரராக தோனி?
"பல ஆண்டுகளாக, சிஎஸ்கேவுக்கு புத்துயிர் வழங்கி வரும் தோனி, தொடக்க வீரராக தான் தனது கேரியரை தொடங்கினார். அப்படி இருக்கும் போது, தன்னுடைய கிரிக்கெட் பயணத்தின் முடிவில் இருக்கும் வேளையில், மீண்டும் அந்த பாத்திரத்தை ஏன் எடுக்கக் கூடாது?. தற்போது 7 ஆவது இடத்தில் இறங்கி வரும் தோனி, அதிகபட்சமாக 10 முதல் 15 பந்துகள் தான் ஆடி வருகிறார். அப்படி இருக்கையில், அவர் ஏன் 3 அல்லது 4 வீரராகவோ, அல்லது தொடக்க வீரராகவோ களமிறங்கக் கூடாது?. அவர் தொடக்க வீரராக இறங்கி, 15 ஓவர்கள் வரை நிலைத்து விட்டால், சிஎஸ்கே அணி ரன் குவிப்பில் கூட பெரிய மாற்றங்கள் நிகழலாம்.
அவருக்கு எல்லாம் தெரியும்
இந்திய அணி கடினமான சூழ்நிலையில் இருக்கும் போது, தோனி சிறப்பாகி ஆடி ரன்களை குவித்துள்ளார். இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகளுக்கு எதிராக நன்றாக ஆடியுள்ளார். இந்த டெக்னிக்கை பயன்படுத்தி, ஆரம்ப ஓவர்களில் எப்படி செயல்பட வேண்டும் என்பது தோனிக்கு தெரியும்" என பார்த்தீவ் பட்டேல் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் மூன்று மற்றும் நான்காம் இடங்களில் களமிறங்கியுள்ள தோனி, இதுவரை தொடக்க வீரராக களமிறங்கியதில்லை. அதே போல, இந்திய அணிக்காகவும் அவர் டி 20 போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கியது கிடையாது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)