'தன் கழுத்தில் தானே தாலி கட்டிய மணமகள்...' 'அவர் செல்போனுக்கு தாலி கட்டிருக்காரு...' கொரோனாவால் நடந்த அல்டிமேட் மேரேஜ்... !

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Apr 28, 2020 10:32 PM

கேரளாவில் இருக்கும் மணமகனுக்கும், லக்னோவில் இருக்கும் மணப்பெண்ணுக்கு வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் திருமணம் நடந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

young couple married via WhatsApp call during lockdown

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதன் காரணமாக வெளியூர்களுக்கு, வெளி மாநிலங்களுக்கும் சென்று சிக்கிய மக்கள் அங்கேயே தங்கி வருகின்றனர். போக்குவரத்து உட்பட அனைத்து வசதிகளையும் மத்திய அரசு முடங்கியுள்ளது மேலும் மாநில அரசுகளும் தங்களின் எல்லைகளை மூடியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முன்பே நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் பல தங்களின் வீடுகளிலும், திருமண மண்டபத்தில் வெறும் 30 பேர் கொண்டே நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளா மற்றும் லக்னோவிற்கு இடையில் இருக்கும் இடைவெளியை தகர்த்து தங்களின் திருமணத்தை நடத்தியுள்ளனர் கேரள தம்பதிகள்.

வங்கி அதிகாரியான ஸ்ரீஜித் கேரளாவில் கோட்டயம் சங்கனாச்சேரி பகுதியை சேர்ந்தவர். இவருக்கும் ஆலப்புழா பள்ளிப்பாடு பகுதியை சேர்ந்த அஞ்சனாவிருக்கும் கடந்த நவம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடந்து, ஏப். 26ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில் லக்னோவில் இன்ஜினியராக உள்ள அஞ்சனா லாக்டவுன் காரணமாக கேரளா வர இயலவில்லை.

இருப்பினும் நிச்சயிக்கப்பட்ட நாளில் திருமணத்தை நடத்த இருவீட்டாரும் தீர்மானித்தனர்.  இதனால் தங்களின் திருமணத்தை வீடியோ காலின் மூலம் நடத்த திட்டமிட்டுள்ளனர் தம்பதிகள்.

நேற்று முன் தினம் அஞ்சனா லக்னோவில் மணப்பெண் கோலத்திலும், ஸ்ரீஜித் மணமகன் கோலத்தில் கேரளாவிலும் போன் முன் அமர்ந்து வாட்ஸ்அப் வீடியோ காலில் திருமணம் செய்து கொண்டனர்.

மணமகன் ஸ்ரீஜித் தன் கையில் இருக்கும் தாலியை போனுக்கு கட்ட, மணமகள் அஞ்சனா அவர் கையில் இருந்த தாலியை தன் கழுத்தில் கட்டிக்கொண்டார். அருகில் இருக்கும் இருவீட்டாரும் மணமக்களுக்கு அட்சதை தூவி ஆசி வழங்கினர்.

இந்த சுவாரஸ்யமான வீடியோவானது தற்போது முகநூல் மற்றும் ட்விட்டரில் அதிக அளவில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.