GUJARAT MORBI BRIDGE : தொங்கு பாலம் அறுந்து விழும் வீடியோ.. "சம்பவம் நடந்ததுக்கு பின்னாடி இருக்குற பதற வைக்கும் காரணம்!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகுஜராத்தில் உள்ள தொங்கு பாலம் அறுந்து விழுந்தது குறித்து இன்னும் சில அதிர்ச்சிகரமான தகவல்களும் வெளியாகி உள்ளது.

குஜராத் மாநிலம், மோர்பி நகரில் உள்ள மச்சு ஆற்றில் மீது தொங்கு பாலம் ஒன்று அமைந்துள்ளது. சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த மோர்பி பாலத்தில் கடந்த 7 மாதங்களாக பழுது பார்க்கும் பணிகள் மற்றும் புனரமைக்கும் வேலைகள் நடைபெற்று வந்தது. தொடர்ந்து, கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி மீண்டும் திறந்து வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தான், திறக்கப்பட ஒரு வாரத்திற்குள் திடீரென மோர்பி கேபிள் பாலம் இடிந்து விழுந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று மாலை இந்த தொங்கு பாலத்தின் மீது ஏராளமான மக்கள் குவிந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அந்த சமயத்தில் ஆட்கள் அதிகமானதன் காரணமாக மோர்பி பாலம் திடீரென அறுந்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதனைத் தொடர்ந்து, பாலத்தில் இருந்த ஏராளமான மக்களும் ஆற்றுக்குள் விழுந்தனர். இது தொடர்பாக தகவலறிந்து மீட்புப்படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர். மீட்புப் பணிகளும் தீவிரமாக நடைபெற்ற நிலையில், 140 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. 100 க்கும் மேற்பட்டோர் வரை காயம் அடைந்திருப்பதாகவும் தகவல் தெரிவிக்கும் நிலையில், நீச்சல் தெரிந்த பலரும் நீந்தியே கரைக்கு சென்று தங்கள் உயிரை காத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், விபத்து தொடர்பாக மேலும் சில தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. இந்த விபத்து நடந்த சமயத்தில் அதில் 500 பேர் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அதே போல, இந்த தொங்கு பலமானது 125 பேர் வரை தான் தாங்கும் என்ற நிலையில், அதில் 500 பேர் இருந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அதே போல, மீண்டும் புனரமைக்கப்பட்டு திறக்கப்பட்ட பாலத்திற்கு சில உரிய ஆவணங்கள் இல்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், பாலத்தில் மக்கள் செல்ல கட்டணம் செலுத்தப்பட்டு டிக்கெட் வழங்கப்பட்டு வரும் வேளையில், மக்களின் எண்ணிக்கை குறித்த கட்டுப்பாடுகளும் இல்லை என்றும் தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுவரை மோர்பி பாலம் அறுந்து விழுந்து தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அதே போல, இந்த பாலம் அறுந்து விழுந்தது தொடர்பான வீடியோ காட்சிகளும் இணையத்தில் வெளியாகி பலரையும் திடுக்கிட வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. நாட்டையே அதிர வைத்த இந்த சம்பவம் தொடர்பாக பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
Also Read | 140 பேரை பலி கொண்ட குஜராத் கேபிள் பாலம்.. விபத்துக்கு சில மணி நேரம் முன்பே கணித்த நபர்.. பகீர் காரணம்!
