''நீ ஒத்த ஆளு உன்னால என்னடா பண்ண முடியும் ? பாருங்க'' - பார்த்திபனின் ஒத்த செருப்பு டிரெய்லர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்கியிருக்கும் படம் 'ஒத்த செருப்பு'. இந்த படத்தில் நடிகர் பார்த்திபன் மட்டுமே நடித்திருக்கிறார்.

Santhosh Narayanan, Parthiepan's Otha Seruppu trailer is out

இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, பிரபல ஒளிப்பதிவாளர் ராம்ஜி இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் இந்த படத்துக்கு ரசூல் பூக்குட்டி ஒலி வடிவமைப்பு செய்துள்ளார்.

பயாஸ்கோப் ஃபிலிம் பிரேமர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் டீஸர் மற்றும் பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

டிரெய்லரின் தொடக்கத்தில் ஒரு ரூம் காட்டப்படுகிறது. பின்னணியில் ஒரு போலீஸ் குரல் ஒலிக்கிறது. 'ஒரு மர்டர் கேஸ்.. மாசிலாமணி என்பவரை விசாரணை பண்ணிட்டிருக்கோம்' என்கிறது ஒரு குரல்.

பின்னர் ஒரு கேமராவின் முன் ஒரு சம்பவத்தை விவரிக்கத் தொடங்குகிறார். அவர் பேசத் தொடங்கியதும் காட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக பரபரவென மாறுகிறது. அதில், அறையின் கதவை பதட்டத்துடன் தட்டுகிறார், பயத்துடன் கத்துகிறார், மறைந்திருந்து யாருடனோ பேசுகிறார். துணியால் முகத்தை மூடுகிறார்.

இதை வைத்து பார்க்கும் போது மோனோ ஆக்டிங் போல ஒரு சம்பத்தை ஒரே பவர் பல்வேறு கதாப்பாத்திரங்களாக மாறி விவரிப்பது போல உள்ளது. சந்தோஷ் நாராயணின் இசை காட்சிகளில் பதட்டத்தை அதிகரிக்கிறது.

ஒரே அறையில் டியூப் லைட் வெளிச்சம், ஜன்னலில் இருந்து வரும் சிறிய ஒளி, டார்ச் லைட் வெளிச்சம் ஆகியவற்றை வைத்துக் கொண்டு பல்வேறு கோணங்களில் சிறப்பான ஒளிப்பதிவை செய்துள்ளார் ராம்ஜி. ஒரு டியூப் லைட் அமர்ந்து எறிவதில் வரும் சத்தத்தைக்கூட துல்லியமாக சேர்த்ததில் தன் இருப்பை காட்டுகிறார் ரசூல் பூக்குட்டி.

டிரெய்லரில் ஒரு பெண் குரல் ஒலிக்கிறது. அந்த குரல் பாதிக்கப்பட்ட நெருங்கியவரின் குரலாக இருக்கலாம். 'இறுதியில் நீ ஒற்றை ஆள் உன்னால என்னடா பண்ணிட முடியும்' என்கிறது ஒரு குரல் . அதற்கு பார்த்திபன், 'தெரியலங்கையா பாருங்க' என்கிறார். பார்க்கலாம்!

''நீ ஒத்த ஆளு உன்னால என்னடா பண்ண முடியும் ? பாருங்க'' - பார்த்திபனின் ஒத்த செருப்பு டிரெய்லர் வீடியோ