தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் ஜூன் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் மற்றும் ஐசரி கே. கணேஷ் ஆகியோரின் தலைமையின் கீழ் சவாமி சங்கர்தாஸ் அணி இந்த தேர்தலில் போட்டியிடுகிறது.

வேட்புமனு தாக்கல் செய்த பிறகு பேசிய கே.பாக்யராஜ், ''ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரிடம் ஆலோசித்த பிறகே இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம். ரஜினிகாந்த் எங்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். நீங்கள் தலைவரானால் நன்றாக இருக்கும் என்று கூறி ரஜினி வாழ்த்தினார்.
ஆரம்பத்தில் இருந்து ஐசரி கணேஷ் தான் இந்த கட்டிடம் கட்ட பாண்டவர் அணிக்கு பக்கபலமாக இருந்தார். ஆனால் பாதி கட்டிடம் முடிந்த நிலையில், வேலைகள் அப்படியே நின்று போய் விட்டது. கிடப்பில் கிடக்கும் இந்த கட்டிடம் கட்ட இந்த சுவாமி சங்கரதாஸ் அணி முழுவீச்சில் செயல்படும். பாண்டவர் அணியின் மீதான அதிருப்தியால் தான் பலர் அங்கிருந்து வந்து இந்த அணியில் சேர்ந்துள்ளனர். இந்த அணியின் செயல்பாட்டில் அரசியல் இல்லை, அரசியல் இருந்தால் நானே போட்டியிட மாட்டேன்''என்றார்.
பின்னர் பேசிய ஐசரி கே.கணேஷ், ''இந்த நடிகர் சங்கத்தை உருவாக்கி, ஆசிர்வாதம் செய்தவர் சங்கரதாஸ் சுவாமிகள். அவர் பெயரை தான் இந்த அணிக்கு வைத்துள்ளோம். இது தான் வெற்றி பெறும் அணி. நீண்ட நாட்களாகவே நடிகர் சங்கத்துக்கும், நாடக கலைஞர்களுக்கும் நிறைய நல்லது செய்யணும் என்ற ஆசை இருந்தது.
அதனால் தான் இந்த சங்கப் பொறுப்புக்கு தலைமை ஏற்க வந்தேன். இந்த கட்டடத்தை முடித்தால் நிறைய நாடக கலைஞர்களுக்கு உதவியாக இருக்கும். நாங்கள் பொறுப்புக்கு வந்தால் ஆறு மாதங்களில் கட்டிடம் கட்டி முடிக்கப்படும் என்று கூறினார்கள். ஆனால் மிக மிக மெத்தனமாக செயல்படுகிறார்கள் பாண்டவர் அணியினர். ஒன்றரை வருடமாக கட்டிட வேலை நடக்காமல் அப்படியே நிற்கிறது. கட்டிடம் முடிக்க இன்னும் 22 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. அதற்காக பாண்டவர் அணியினர் என்ன திட்டங்கள் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
சங்க கட்டிடம் கட்டவும் நாடக கலைஞர்கள் நல்வாழ்விற்காகவும் தான் இந்த அணியை துவக்கியுள்ளோம். பொருளாளர் பதவிக்கு வந்தால் நான் தூங்காமல் 24 மணி நேரமும் வேலை செய்வேன் என சொல்லியிருக்கிறார் தம்பி பிரஷாந்த். கே.எஸ்.ரவிக்குமார் எங்கள் அணியில் போட்டியிடுகிறார். நல்ல ஒரு அணியை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம், நிச்சயம் வெற்றி பெற்று சங்கத்தின் வெற்றிக்கு பாடுபடுவோம்'' என்றார்