'சந்திரலேகா' முதல் 'கயல்' வரை! பழம்பெரும் நடிகை மரணம்!... திரையுலகினர் அஞ்சலி!
முகப்பு > சினிமா செய்திகள்"ஈறைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கிறவளாச்சே” இந்தப்பழமொழியை இவரை விட கனக்கச்சிதமாக யாரும் பேசி இருக்க முடியாது. '16 வயதினிலே', திரைப்படத்தில் ஜெமினி ராஜேஸ்வரியின் இந்த வசனம் அப்போது பட்டித்தொட்டியெங்கும் பரவியது.

'சந்திரலேகா', திரைப்படம் மூலம் தனது 8 வயதில் தமிழ் சினிமாவிற்கு அதிமுகமானவர் ராஜேஸ்வரி. ஜெமினி ஸ்டுடியோவில் பணியாற்றியதால் இவருக்கு ஜெமினி ராஜேஸ்வரி என்று பெயர் வந்தது.
காரைக்குடியை பூர்வீகமாக கொண்ட ராஜேஸ்வரி, 1000க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார். 'கண்ணும் இமையும்’ நாடகத்தில் இவர் நடித்தபோது அதைப்பார்த்த இயக்குநர் ஜோசப் தளியத் ‘காதல் படுத்தும் பாடு’ படத்தில் நடிக்க வைத்தார்.
கமல்ஹாசனின் 16 வயதினிலே, பாக்யராஜின் சின்ன வீடு மற்றும் மண் வாசனை, நிறம் மாறாத பூக்கள், நீறு பூத்த நெருப்பு, இது எங்க நாடு, விளையாட்டு கல்யாணம், பத்தாம் பசலி, உனக்காக நான், திருடன், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன். எதிர்நீச்சல் மற்றும் கயல் உள்பட ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார். 95 வயதான இவருக்கு நேற்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜேஸ்வரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மரணம் அடைந்த ஜெமினி ராஜேஸ்வரிக்கு தட்சிணாமூர்த்தி, செல்வராஜ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். ஜெமினி ராஜேஸ்வரி மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.