Jango Others
www.garudabazaar.com

ஜெய்பீம் விவகாரம்: "சாதியை தூக்கிப் பிடிப்பது தமிழகத்தின் சாபக்கேடு" - கவிஞர் தாமரை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜெய் பீம்' திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தத் தீபாவளி வெளியீடாக நவம்பர் 2 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

Kavignar Thamarai about suriya starring Jai Bhim controversy

'ஜெய்பீம்' படத்திற்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், இயக்குநர் பா ரஞ்சித் உள்ளிட்ட அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். மேலும் இந்தப் படத்திற்கு ஏராளமான பிரபலங்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் சில சர்ச்சைகளையும் கிளப்பியது, படத்தின் காலண்டர் சர்ச்சை குறித்து பாமக கட்சி சார்பில் அன்புமனி MP அறிக்கை வெளியிட்டார்.

இதற்கு சூர்யாவும் பதில் அளித்திருந்தார். இந்த விவகாரத்தில் சூர்யாவுக்கு ஆதரவளித்து இயக்குநர்கள் பாரதிராஜா, வெற்றிமாறன், அமீர் , நடிகர் நாசர் மற்றும் தென்னிந்திய வர்த்தக சபை என பலதரப்பில் இருந்தும் சூர்யாவுக்கு ஆதரவாக, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோரிடம் சூர்யா மீதான விமர்சனத்தை தவிர்க்கும்படியான வேண்டுகோள் கடிதங்களும் வெளியாகின. இன்னொருபுறம் திருமாவளவன், இந்திய மார்கிசிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில கட்சி மற்றும் இயக்க தலைவர்களும் சூர்யாவின் ஜெய்பீம் படத்தை பாராட்டி இருந்தனர்.

Kavignar Thamarai about suriya starring Jai Bhim controversy

இந்த விவகாரத்தில் சூர்யாவுக்கு ஆதரவளித்து கவிஞர் தாமரை அறிக்கை வெளியிட்டுள்ளார், அதில், "17.11.21. ஜெய்பீம் சர்ச்சை !. ஜெய்பீம் சர்ச்சை சிறிய புகைச்சலாகத் தொடங்கி நாளுக்கு நாள் பெரிதாகி வருகிறது. நல்ல நோக்கத்தோடு எடுக்கப்பட்ட ஒரு படம் இப்படி நார்நாராகக் கிழிக்கப் படுவது வருத்தத்தை அளிக்கிறது. ஜெய்பீம் நான் பார்க்கவில்லை. பார்க்கப் போவதுமில்லை. 'விசாரணை' படமும் அப்படித்தான். உண்மைக்கு நெருக்கமான இப்படிப்பட்ட படங்களைப் பார்த்தால் அவை எனக்கு மிகுந்த மனவுளைச்சலைத் தந்து என் தூக்கத்தைப் போக்கி விடுகின்றன என்பதுதான் காரணம். பாலாஜி சக்திவேலின் 'வழக்கு எண் 18/9' பார்த்து விட்டுப் பலநாட்கள் துன்புற்றேன். அவருக்குத் தொலைபேசி செய்து 'இனிமேல் உங்கள் படங்களைப் பார்க்கப் போவதில்லை' என்று சொன்னேன்.

Kavignar Thamarai about suriya starring Jai Bhim controversy

 படங்கள் பார்ப்பதில்லையே தவிர இத்தகைய படங்களின் செய்தியிலும் நோக்கத்திலும் நமக்கு முழு உடன்பாடே !. ஒரு கலைப்படைப்பு சமூகத்தின் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இப்படங்கள் வெளியானதும் வெகுமக்கள் அவற்றின் மீது நிகழ்த்தும் உரையாடலே சான்று ! அரசாங்கத்தின் பார்வை உடனே பாதிக்கப்பட்ட சமூகத்தின் மேல் விழுந்தது கூடுதல் பலன் ! 👏👏👏

ஆனால், மக்களிடையே பெரும் வரவேற்புப் பெற்ற படம் ஏன் ஒரு கட்சியினரால் எதிர்ப்புக்குள்ளாகிறது ? 🤔 நான் படம் பார்க்கவில்லையாதலால் அதில் காட்டப்படும் சர்ச்சைக்குரிய கூறுகள் குறித்து கருத்துச் சொல்ல முடியவில்லை. எனினும் பலதரப்பட்ட செய்திகளைப் படித்துத் தெரிந்து கொண்ட வகையில் பேசுகிறேன்.

படம் ஒரு குறிப்பிட்ட உண்மைநிகழ்வின் அடிப்படையில் அமைந்துள்ளது. அதேசமயம் இது ஆவணப்படமல்ல, திரைப்படம் எனும் கலைப்படைப்பு !.  எனவே சுவை குறையாமல் கொண்டு செல்ல எப்படி வேண்டுமானாலும் திரைக்கதை அமைத்துக் கொள்ளலாம், கற்பனையாக சிலவற்றைச் சேர்க்கவோ மாற்றவோ செய்யலாம். அது படைப்பாளியின் உரிமை ! படம் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதால், இயக்குநர் ஞானவேல் அதைச் சிறப்பாகச் செய்துள்ளார் என்று தெரிகிறது.

பின் எங்கே தவறு நிகழ்ந்தது?.

அக்கினிக்கும்பம் வன்னிய சமூகத்தினருக்கான குறியீடு என்று எனக்கு இன்றுதான் தெரியும் 😲. அது சுட்டிக்காட்டப்பட்டவுடன் ஏற்றுக் கொண்டு அந்தக் காட்சித்துண்டை நீக்கி விட்டார்கள். பிறகும் ஏன் சர்ச்சை தொடருகிறது ?🤔 அடித்துக் கொல்லப்பட்ட இராசக்கண்ணு இராசாக்கண்ணு என்ற பெயரிலேயே வருகிறார், ஆனால் தலித் கிறித்துவராக அறியப்படும் குற்றவாளி ஏன் வேறொரு சாதிக்காரர் பெயரில் காட்டப்பட வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது. இந்தக் கொடுமையான நிகழ்வின் சட்டப்போராட்டத்தில் பெரும்பங்காற்றிய கோவிந்தன் என்பவர் பற்றி சிறுகுறிப்பு கூட வரவில்லை என்பது வியப்பளிக்கிறது. அவர் மட்டுமல்லர், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி பெற்றுத்தரப் போராடியவர்கள் பலரும் வன்னியசாதியினர் என்று கூறுகிறார்கள்.

அவர்கள் சாதிக்கட்சியாக நில்லாமல், பொதுவுடமைக்கட்சித் தொண்டர்களாக இருந்ததுதான் வேற்றுமை பாராமல் குறவர் (இருளர்) இனத்தவருக்கு உதவி செய்யக் காரணம் !  ( பார்வதி அம்மாள் உள்ளிட்டவரின் பேட்டி சிறப்பு ! ). குற்றவாளிகளை வன்னியர்களாகக் காட்டிவிட்டு, குற்றத்துக்கெதிராகப் போராடிய வன்னியர்களைக் காட்டாமல் விட்டதுதான் இயக்குநர் செய்த தவறு ! இது இவ்வளவு பெரிய பிரச்சினையாக உருவாகும் என்று தெரியாததால் இதில் கோட்டை விட்டுவிட்டார் என்று தோன்றுகிறது. எனவே இதில் எந்த உள்நோக்கமும் இல்லை எனும் அவர்களின் விளக்கமும் ஏற்கத் தக்கதே !. இயக்குநரின் பேட்டியில், தனக்கு இது இரண்டாவது படம்தான், எனவே அடுத்தடுத்த படங்களில் இதுபோன்ற தவறுகள் நிகழாமல் பார்த்துக் கொள்வேன் என்று கூறுவதும் ஏற்றுக் கொள்ளத்தக்க விளக்கமே !.

திரு சூரியா எல்லோரையும் மதித்துப் பதிலளித்திருக்கிறார். சுட்டிக்காட்டியதை நீக்கியிருக்கிறார். இருளர் இனத்தவரின் கல்விக்காக பெருந்தொகை அளித்திருக்கிறார். பார்வதி அம்மாவை சந்தித்து இன்று 15 இலட்சம் உதவியளித்திருக்கிறார். இவையெல்லாம் சூர்யாவின் பெருந்தன்மையைத்தான் காட்டுகின்றன. பெருந்தன்மையையும் பணிவையும் பலவீனங்களாகக் கருதக் கூடாது. தான் ஈட்டுவதைத் தனக்கே வைத்துக் கொள்ளாமல் சமூகநலனுக்காக செலவிடும் சமூக உணர்வாளர் ;  உள்ளபடிக்கே நல்ல பண்பாளர் சூர்யா. எதையும் விளம்பரத்துக்காகச் செய்பவர் அல்லர்.  தனிப்பட்ட முறையில் நான் நன்கறிவேன்.

விளிம்பு நிலை மக்கள் எதிர்கொள்ளும் துன்பங்களை எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதுதான் அவரது நோக்கமே தவிர, பிறரது துன்பக்கதையை வைத்துப் பணம் ஈட்டுவது அல்ல ! ஒருவேளை இந்தப்படம் தோல்வியடைந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் ? அவருக்கு மட்டும்தானே நட்டம் ? வேறெவரேனும் பங்கு போட்டிருப்பார்களா ? அதற்குள் என்னென்ன வசைபாடல்கள் !! வாந்திகள் !! வக்கிர சிந்தனைகள் !! 😡... அடித்தால் ஒரு இலட்சம் என்று அலறுகிறான் ஒரு சாதி வெறியன். ஒரு கொடுமையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த சூர்யா வன்முறையாளரா, அடிப்பேன் உதைப்பேன் என்பவர் வன்முறையாளரா ?? 😡 திரைப்படத்துறையில் தவறான ஆட்கள், சுயநலமிகள் இருக்கலாம். பொருளீட்டுவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், ஒரு கலைஞரை வன்மையாக எதிர்க்குமுன் அவரது பண்புத்தடத்தை (reputation) ஆராய்ந்து பார்த்து விட்டு விமர்சனம் செய்யுங்கள்.

நல்லதொரு கலைஞனை விட்டு வையுங்கள் ! மக்களுக்கு நல்ல படைப்புகள் கொடுக்க வேண்டும், திரைப்படக் கலையைப் பயன்படுத்தி சமூகத்திற்கு ஏதாவது உருப்படியாகச் செய்ய வேண்டும் என்று செயல்படும் கலைஞர்களுள் சூர்யாவும் ஒருவர் ! நட்டஈடு கேட்டுப் போடப்பட்டுள்ள வழக்கு தவறானது. அதன்மூலம் தம் பெயரைத் தாமே கெடுத்துக் கொள்வதே விளைவாக வரும் !. தங்கள் படைப்பு எந்தத் தவறான உள்நோக்கமுமற்றது, எதிர்காலத்தில் தங்கள் படைப்புகளில் கவனமாக இருப்போம் என்று படத்தரப்பினர் கூறுவதை ஏற்று பிரச்சினையை இத்தோடு முடித்துக் கொள்ளுங்கள் என்று வேண்டுகிறேன் !.. 

பி.கு :   சாதி, சாதிப் பிரிவினைகள், சாதியாக ஒன்று சேர்வது, சாதிப் பெருமையைத் தூக்கிப் பிடிப்பது போன்ற தமிழகத்தின் தீராத சாபக்கேடுகள் தொடர்பாகத் தனியாகப் பேச வேண்டும்.  சாதிப்பிரிவினையை ஒழிப்பது குறித்து அரசாங்கமும் சமூகமும், இட ஒதுக்கீடு தாண்டி,  புதிய சிந்தனையை வடித்தெடுக்க வேண்டிய நேரம் வந்தாகி விட்டது", என்று சூர்யாவிற்கு தனது ஆதரவை பேஸ்புக் வழியாக தெரிவித்திருக்கிறார் தாமரை

தொடர்புடைய இணைப்புகள்

Kavignar Thamarai about suriya starring Jai Bhim controversy

People looking for online information on JaiBhim, Suriya, Thamarai will find this news story useful.