பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடத்தில் பிரபலமான நடிகர் தாடி பாலாஜி, தனது குடும்பத்தை சீரழித்த எஸ்.ஐ மனோஜ்குமார் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்குமாறு சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் கடந்த மார்ச்.4ம் தேதி புகார் ஒன்றை தெரிவித்திருந்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த பாலாஜி, உன்னதமான காவல்துறை பணியில் இருந்துக் கொண்டு எஸ்.ஐ மனோஜ்குமார் தனது குடும்பத்தை நாசமாக்குவதாகவும், அவருக்கு தண்டனை பெற்றுத் தரும் வரையில் ஓய மாட்டேன் என்றும் கூறியிருந்தார்.
இந்த புகார் குறித்த கூடுதல் தகவலுக்காக தாடி பாலாஜியை நாம் தொடர்புக் கொண்ட போது, அவரின் பதில், "காவல்துறையில் நல்லவர்களும் இருக்கிறார்கள். சமீபத்தில் பொள்ளாச்சியில் இளம் பெண்ணிடம் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகி, அவரை தனிமையில் வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்த கும்பலை தனிப்படை அமைத்து போலீசார் இன்று கைது செய்துள்ளது பாராட்டத்தக்கது.
தவறுகளை தட்டிக் கேட்கும் இடத்தில் இருக்கும் காவல்துறையில் இருந்துக் கொண்டு எஸ்.ஐ மனோஜ்குமார் எனது குடும்ப வாழ்க்கையில் விளையாடி வருகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை நான் விடமாட்டேன். பொள்ளாச்சி சம்பவத்தில் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டது போல் எனது புகார் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையை கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.
மேலும், கல்லூரி பெண்கள், வீட்டில் இருக்கும் பெண்களின் வாழ்க்கை சீரழிவதற்கு முக்கிய காரணம் ஃபேஸ்புக், டிக் டாக், வாட்ஸ் அப் போன்றவை தான். எதையும் அளவோடு செய்தால் யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. இதனால் தான் வேறு சிலரால் ஒரு குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு பிரச்னைகள் பூதாகரமாகின்றன" என்றார்.