'சென்னை பெண்கள் விடுதியில் பாலியல் புகார்'...வார்டனை நையப்புடைத்த பெண்ணின் தாய்!

முகப்பு > செய்திகள் > தமிழ்

By Jeno | Mar 13, 2019 09:50 AM

நாட்டிலேயே பெண்களுக்கு  மிகவும் பாதுகாப்பான மாநிலமாக கருதப்படும் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பொள்ளாச்சியில் இளம் பெண்களுக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள்,பெண்கள் விடுதியில் தங்கி இருக்கும் பெண்களுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Girl has been sexually assaulted in chennai hostel

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் ஆராதனா என்ற தனியார் பெண்கள் விடுதி செயல்பட்டு வருகிறது.அதில் ஆனந்தி என்பவர் வார்டனாகவும், தாமஸ், ஆறுமுகம், கிருஷ்ணா ஆகியோர் பாதுகாவலர்களாக செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.இதனிடையே மதுரையை சேர்ந்த பெண் ஒருவர்,சென்னை சட்டக்கல்லுரியில் படித்துவரும் தனது மகளை இந்த விடுதியில் சேர்த்துள்ளார்.இந்த விடுதியின் வார்டனாக இருக்கும் ஆனந்தி,பணம் படைத்த இளைஞர்களின் நட்பினை ஏற்படுத்தி தருவதாக ஆசை வார்த்தைகளை கூறி,அங்கு இருக்கும் பெண்களை பப்புகளுக்கும், பார்ட்டிகள் நடக்கின்ற பண்ணை வீடுகளுக்கும் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

அவ்வாறு பார்ட்டிக்கு வரும் ஆனந்தியின் ஆண் நண்பர்கள்,விடுதியில் இருந்து வரும் பெண்களுக்கு மதுவினை ஊற்றி கொடுத்து அவர்களின் விருப்பத்தினை நிறைவேற்றி கொள்வார்கள் என கூறப்படுகிறது.எந்த பெண்ணை அழைத்து வர வேண்டும் என்பதனையும் அந்த கும்பல் விடுதிக்கே வந்து தேர்வு செய்துவிட்டு பின்பு தொலைபேசியில் தகவல் அளிப்பார்கள் என கூறப்படுகிறது.அந்த வகையில் மதுரையில் இருந்து இங்கு தங்கி சட்டக் கல்லூரியில் படித்து வரும் பெண்ணை அந்த கும்பல் தேர்வு செய்து அழைத்து வர வற்புறுத்தியிருக்கிறது.

ஆனால் அதற்கு ஒத்துழைக்காத அந்த மாணவியை,வார்டன் ஆனந்தி அடித்து உதைத்துள்ளார்.மேலும் அந்த பெண்ணின் உடைமைகளை எடுக்க முடியாதவாறு அவரது அறையினையும் பூட்டி விட்டார்.தனது மகளுக்கு நிகழ்ந்த கொடுமைகள் குறித்து அறிந்து,ஊரில் இருந்து வந்த அந்த பெண்ணின் தாய்,வார்டனிடம் நியாயம் கேட்க சென்றபோது வார்டனை அடித்து புரட்டி எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே விடுதியில் தங்கி இருந்த பல பெண்களின் வாழ்க்கையினை வார்டன் சீரழித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.இதற்கிடையே சம்பந்தபட்ட மாணவி தன்னுடன் படிக்கின்ற ஆண் நண்பர்களை அழைத்து வந்து விடுதியில் பிரச்சனை செய்ததால் தான் அவரை விடுதியில் இருந்து வெளியேற்றியதாக வார்டன் ஆனந்தி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் பொள்ளாச்சி சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், பூந்தமல்லி பெண்கள் தங்கும் விடுதியில் நடந்த சம்பவங்கள் குறித்து முழுமையான விசாரணை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : #SEXUALABUSE #CHENNAI