பேச்சுவார்த்தைதான் சரியான தீர்வு.. போரால் தீர்வு ஏற்படாது: பாகிஸ்தான் பிரதமர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Selvakumar | Feb 27, 2019 05:34 PM
புல்வாமா பகுதியில் நடந்த கொடூரத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று அதிகாலை இந்திய விமானப்படை தீவிரவாதிகளின் முகாம் மீது தாக்குதல் நடத்தியது. இதில் மிராஜ் 2000 ரக போர் விமானங்களின் மூலம் 1000 கிலோ அளவிலான குண்டுகளை இந்திய ராணுவம் வீசியது. இதனால் காஷ்மீரின் ஆக்கிரமிப்பு பகுதியான பால்கோட் என்னுமிடத்தில் இருந்த பயங்கரவாதிகளின் முகாம் முற்றிலுமாக அழிக்கபட்டதாக விமானப்படை தெரிவித்தது.

இந்திய விமானப்படை நடத்திய இந்த தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் மைத்துனர் மவுலான யூசஃப் அசார் உட்பட பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே தெரிவித்தார்.
இதனை அடுத்து இன்று காலை (27.02.2019) இந்திய எல்லையை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்து குண்டுவீசியதாகவும், ஆனால் இந்திய விமானங்கள் திருப்பித் தாக்கியதாகவும் இந்திய ராணுவம் கூறியது. ஆனால் தற்போது இந்திய விமானி கைது செய்யப்பட்டிருப்பதை அது தொடர்பான வீடியோவுடன் பாகிஸ்தான் வெளியிட்டது.
இந்நிலையில் இது குறித்து பேசிய பாகிஸ்தான் பிரதமர்,‘போரால் பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படாது. சரியான பேச்சுவார்த்தைதான் பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும். புல்வாமா தாக்குதல் பற்றி இந்தியா விசாரித்தால் ஒத்துழைப்பு தர தயார்’ என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
