கேராளவை சேர்ந்த செவிலியருக்கு 'கொரோனா' வைரஸ்...! இதுவரை 600 பேருக்கு பரவியுள்ளதாக அதிர்ச்சி தகவல்...! தீவிர சிகிச்சை அளிக்க கேரள முதல்வர் வலியுறுத்தல்...!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட ஊஹான் நகர மக்கள் அங்கிருந்து வெளியேற அந்நாட்டு அரசு தடைவிதித்துள்ளது. இதுதவிர ஹூவாங்காங் உள்ளிட்ட மேலும் இரு நகரங்களுக்கும் சீன அரசு இதே போன்ற தடையை விதித்துள்ளது.

2002ம் ஆண்டில் பரவிய சார்ஸ் உலகம் முழுவதும் எழுநூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அதைவிட கொரோனா வைரஸ் ஆபத்தானதா என மருத்துவர்கள் அஞ்சிய நிலையில் ஊஹான் நகரில் இருந்து மக்கள் வெளியேற சீன அரசு தடை விதித்துள்ளது. மேலும் மத்திய சீனாவின் மிகப் பெரிய ஊஹான் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கவும், புறப்படவும் தடை விதித்துள்ள சீன அரசு ரயில் நிலையங்களையும் மூட உத்தரவிட்டுள்ளது. ஊஹான் நகரில் பேருந்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஒரு கோடியே 10 லட்சம் பேர் வசிக்கும் ஊஹானுக்கு சீனா கிட்டத்தட்ட பூட்டு போட்டுவிட்டது என்றே கூறலாம்.
பொதுமக்கள் வெளியில் வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என உத்தரவி்டுள்ள சீனா, ஊஹான் நகருக்கு 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 70 லட்சம் பேர் வசிக்கும் ஹூவாங்காங் நகரிலும் ஊஹானை போலவே கெடுபிடிகளை பிறப்பித்துள்ளது. இதுபோல் 10 லட்சம் பேர் வசிக்கும் இசோ நகரிலும் போக்குவரத்துக்கு தடை விதித்து, மக்கள் வெளியேறக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே சவுதி அரேபியாவில் உள்ள அசீர் அபா அல் ஹயாத் மருத்துவமனையில் பணிபுரியும் கேரளம் கோட்டயத்தைச் சேர்ந்த பெண் நர்ஸுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும் தகவல் தெரியவந்துள்ளது. இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி்யுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், சவுதி அரேபிய அரசை தொடர்பு கொண்டு செவிலியருக்கு தீவிர சிகிச்சை அளிக்க வலியுறுத்தவேண்டும் எனக் கோரியுள்ளார்.இந்திய விமான நிலையங்களில் சீனாவில் இருந்து வரும் பயணிகளின் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பரிசோதித்துள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவவில்லை என மத்திய அரசு உறுதிபட கூறியுள்ளது.
இதனிடையே, தாய்லாந்து, ஜப்பான், அமெரிக்கா என பரவிய கொரோனா வைரஸ், தற்போது மெக்சிகோவை எட்டியுள்ளது. சீனா சென்று திரும்பிய பேராசிரியருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டதால் அவரை தீவிர கண்காணிப்பில் அந்நாட்டு அரசு வைத்துள்ளது. உலகெங்கும் விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
