'வாழ்க்கையை நினைத்து பயத்தோடு வாக்கிங் போன நபர்'... 'ஒரே ஒரு 'வாந்தியால்' அடித்த ஜாக்பாட்'... தலைகீழாக மாறிய வாழ்க்கை!
முகப்பு > செய்திகள் > உலகம்வாழ்க்கையை நினைத்து பயத்துடன் நடைப்பயிற்சி போன நபரின் மொத்த கஷ்டமும் ஒரு நொடியில் மாறிப்போன சம்பவம் நடந்துள்ளது.

பலருக்கும் வாழ்க்கையைப் பற்றிய பயம் எப்போது இருக்கும். அடுத்து என்ன செய்யப் போகிறோம், எதிர்காலம் எப்படி இருக்குமோ போன்ற பயங்கள் எப்போதும் மனதில் வந்து கொண்ட இருக்கும். அதிலும் குறிப்பாக ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பின்னர் அந்த பயம் என்பது அதிகரித்துக் கொண்டே செல்லும். அந்த வகையில் தாய்லாந்து நாட்டின் தென் பகுதியில் வசித்து வருபவர், Naris Suwannasang. மீனவரான இவர் சமீபத்தில் தனது குடியிருப்பிற்கு அருகில் உள்ள கடற்கரையில் நடைப்பயிற்சி சென்றுள்ளார்.
அப்போது தனது பொருளாதார சூழல் குறித்தும், கொரோனாவால் எந்த அளவிற்குத் தொழில்கள் எல்லாம் முடங்கி விட்டது என்பது குறித்தும் யோசித்தவாறே நடந்து சென்றுள்ளார். அப்போது கரை ஓரத்தில் வெளிர் நிற பாறை போன்ற கட்டிகள் ஒதுங்கிக் கிடந்துள்ளது. அவற்றைப் பார்க்கும் போது அது வழக்கத்திற்கு மாறாக இருந்ததையடுத்து, உடனே தனது உறவினரை அழைத்து அவற்றைச் சேகரித்து தனது வீட்டிற்கு Naris எடுத்துச் சென்றுள்ளார்.
வீட்டிற்கு எடுத்து வந்த நிலையிலும் கடற்கரையில் கிடைத்தது என்னவென்பது அவருக்குத் தெரியாமல் இருந்தது. பின்னர் சிலரிடம் அதுகுறித்து Naris விசாரித்த நிலையில், அது மிதக்கும் தங்கம் என்பது அவருக்குத் தெரிய வந்தது. அதாவது ''திமிங்கிலத்தின் வாந்தி'' தான் மிதக்கும் தங்கம் என அழைக்கப்படுகிறது. சுமார் 100 கிலோ இருக்கும் எனக் கூறப்படும் இந்த வாந்தி, உலகிலேயே இதுவரை யாருக்கும் இந்த எடைக்குக் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
Narisக்கு கிடைத்த மிதக்கும் தங்கம் குறித்து அறிந்து கொண்ட தொழிலதிபர் ஒருவர், அதன் தரத்திற்கு ஏற்றாற்போல் கிலோவுக்கு 23,740 பவுண்டுகள் விலையாகத் தரலாம் எனக் கூறியுள்ளார். மாதம் 500 பவுண்டுகள் ஈட்டுவதற்கே கஷ்டப்பட Naris, தற்போது 2.4 மில்லியன் பவுண்டுகளுக்கு அதிபதியாக மாறப் போகிறார். அம்பெர்கிரிஸ் என அழைக்கப்படும் இந்த கட்டிகளை நிபுணர்கள் மூலம் சோதனை செய்ய Naris முடிவு செய்துள்ளார்.
அதன் மதிப்பு அதிகமாக இருக்கும் காரணத்தினால் கொள்ளை போக வாய்ப்பிருக்கலாம் என்பதால் காவல்துறையின் உதவியையும் Naris நாடியுள்ளார். வாழ்க்கை என்பது எந்த நொடியிலும் மாறலாம் என்பதற்கு உதாரணமாக மாறியுள்ள Naris இது குறித்துப் பேசும் போது, ''கொரோனா எண்களின் பொருளாதாரத்தை அடியோடு சிதைத்து விட்டது.
இதனால் பொருளாதாரத்தைச் சரி செய்ய என்ன செய்யப் போகிறோம் என்பது பெரும் கேள்விக் குறியாக இருந்த நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது'' என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். Narisக்கு கிடைத்துள்ள திமிங்கிலத்தின் வாந்தி, அதாவது மிதக்கும் தங்கம் இந்திய மதிப்பில் சுமார் 23 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
