'அட 2 ரூபாய்க்கு சானிட்டரி நாப்கினா...! 'அவங்கதான் கற்றாழையை துணியில வச்சு யூஸ் பண்றாங்கன்னு...' அசத்தும் அல்டிமேட் ப்ராஜெக்ட்... !
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இளங்கலை தாவரவியல் மூன்றாமாண்டு பயிலும் மாணவர்களான புவனேஷ்வரி, சாம்ராய் டெரன்ஸ், வைரவன், பரணிதரன் ஆகியோர் இயற்கை முறையில் 2 ரூபாய்க்கு நாப்கின் தயாரித்து அசத்தியுள்ளனர்.

கல்லூரி பயிலும் மாணவர்களுக்கு புராஜெக்ட் தயாரிப்பது என்பது வழக்கமான செயல் தான். ஆனால் புவனேஷ்வரி, சாம்ராய் டெரன்ஸ், வைரவன், பரணிதரன் ஆகிய மாணவர்கள் தங்களின் புராஜெக்ட் இயற்கை முறையிலும், ஏழை மக்களுக்கு பயன்படும் வகையிலும் அமைய வேண்டும் என நினைத்து தங்கள் கல்லூரி பேராசிரியர்களான செந்தில்குமார், பிரான்ஸிஸ் சேவியர் வழிகாட்டுதலில், இயற்கை முறையில் நாப்கின் தயாரித்தல் எப்படி எனத் தேட ஆரம்பித்தனர்.
இதற்காக சுற்றுப்புற கிராமங்களுக்கு சென்று மலைகிராம பகுதிகளில் தங்கியுள்ளோரிடம் விசாரிக்கும் போது அங்கு உள்ள பெண்கள் தங்களுடைய மாதவிடாய்க் காலங்களில் சீமைக் கற்றாழை நார்களைத் துணிகளுடன் வைத்துப் பயன்படுத்தியது தெரியவந்தது. தங்களின் விடாமுயற்சியை கைவிடாத மாணவர்கள் இதை தங்களின் புராஜக்டா எடுத்து வெறும் 2 ரூபாய் செல்வில் நாப்கின் தயாரித்து அசத்தியிருக்கிறார்கள்.
நாப்கின்னை, சீமைக் கற்றாழை செடிகளிலிருந்து முதலில் நார்களைப் பிரித்து எடுத்து, அதை சோடியம் ஹைட்ராக்சைடில் நனைக்கும்போது இலகுவாகிய பின், தொடர்ந்து அந்த நார்களையும், பஞ்சுகளையும் வைத்து நாப்கின்கள் தயாரித்துள்ளனர். அதை தொடர்ந்து அதை யூவி எனப்படும் புற ஊதாக் கதிர்களின் உதவியுடன் சுகாதாரமான முறையில் தரம் உயர்த்தியுள்ளதாக மாணவர்கள் கூறுகின்றனர்.
இந்த நாப்கின் 13 எம்.எல் வரை ஈரப்பதம் தாங்கும் அம்சம் கொண்டதாக இருக்கும் எனவும், நாம் இப்போது கடைகளில் வாங்கும் நாப்கின்கள் 7 எம்.எல் வரை ஈரத்தன்மையைத் தாங்குவதாகும்.
இயற்கை முறையில் தயாரித்த இந்த கற்றாழை நாப்கின்களால் எந்த வித அலர்ஜியும், நோய் தொற்றும் ஏற்படாது எனவும், சீமைக் கற்றாழை நோய்க் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது எனவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், நாப்கினை மட்டுமல்ல, ரூபாய் 15000 செலவில் அதைத் தயாரிக்கும் இயந்திரத்தையும் மாணவர்களே வடிவமைத்து மொத்தம் வெறும் 2 ரூபாய் செலவில் நாப்கின்னை செய்து அதை கிராமப்புறப் பெண்களுக்கும் பின்தங்கியவர்களுக்கும் பயனுள்ள வகையில் கொண்டு சேர்ப்பதுதான் தங்களின் நோக்கமாக கொண்டுள்ளனர்.
மேலும் இக்கல்லூரி சென்ற ஆண்டு ஒரு பாகம் இயற்கை முறையிலான நாப்கின் தயாரிப்பது. பற்றிய ஆய்வறிக்கையை அரசுக்கு அனுப்பி, இயற்கை நாப்கினை 50,000 கிராமங்களுக்குப் பயன்பெறும்வகையில் தயாரித்திட முயற்சி எடுத்துள்ளனர். அந்த முயற்சியில் தோல்வி அடைந்தாலும் விடாமுயற்சியுடன் செயல்பட்டு இந்த வருடம் அதை சாதித்து காட்டியுள்ளனர். இதற்கு பேராசியர்களும், கல்லூரியின் முதல்வர் ஆரோக்கியசாமி சேவியர், துறைத்தலைவர் செந்தில்குமார் உள்ளிட்டோர் மிகவும் வழிகாட்டினர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்
இந்த கற்றாழை நாப்கின் ஒரே வாரத்தில் விரைந்து மக்கும் தன்மைகொண்டது அதை நாம் உரமாக கூட பயன்படுத்தலாம்.
தங்களின் இந்த கண்டுபிடிப்பை கிராமப்புற மற்றும் மலைவாழ் மக்களுக்கும் சுயதொழில் செய்யக்கூடிய திருநங்கைகளுக்கும் கிராமப்புற மகளிருக்கும் கொண்டு போய்ச் சேர்த்திட முடிவு செய்துஉள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
