'மருத்துவரின் நெஞ்சை உருக செய்யும் கடிதம்...' 'எங்களை அடிக்காதீங்க...' 'நாங்களும் மனுசங்க தான்...' 'அடக்கம் செய்ய விடாமல் வன்முறை...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Apr 20, 2020 01:06 PM

சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்த மருத்துவரை அடக்கம் செய்ய மறுத்து வன்முறையில் ஈடுபட்ட மக்களுக்கு கண்ணீருடன் மற்றொரு மருத்துவர் எழுதிய கடிதம் சமூகவலைத்தளங்களில் பரவி நெஞ்சை உருக செய்துள்ளது.

chennai doctor written tearful letter to the public

தனது பேஸ்புக் பக்கத்தில் டாக்டர் பரதீப் குமார் எழுதிய உருக்கமான கடிதத்தில், "இந்த கடிதத்தை கண்ணீருடனும், ரத்தத்திலும் எழுதுகிறேன். கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனாவை எதிர்த்து போராடும் ஒவ்வொரு டாக்டருக்காகவும் இந்த கடிதத்தை எழுதுகிறேன். இந்த எதிரியை எந்த குண்டுகளினாலும், புல்லட்களினாலும், ஏவுகணைகளினாலும் கொல்ல முடியாது. நண்பர்களே நாங்கள் வீரர்கள் இல்லை. நாங்களும்,உங்களை போன்றவர்கள் தான். இதனை தற்போது நீங்களும் அறிந்திருப்பீர்கள். ஏனென்றால், நீங்கள் அனைவரும் சேர்ந்து எங்களை தாக்கியுள்ளீர்கள். மிகவும் வேதனை படுத்தி உள்ளீர்கள். அப்போது, டாக்டர்களுக்கு ரத்தம் வருவதை பார்த்திருப்பீர்கள். நாங்களும் உங்களை போன்றவர்கள் தான்.

எங்கள் நரம்பியல் டாக்டர், கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் போரில் உயிர்தியாகம் செய்துள்ளார். அவரது உடலை அடக்கம் செய்ய மயானத்திற்கு கொண்டு சென்ற போது, 50க்கும் மேற்பட்ட மக்கள் எங்களை குச்சியாலும் கற்களாலும் தாக்கினீர்கள். ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கும், மாநகராட்சி சுகாதார ஊழியர்களுக்கும் காயம் ஏற்பட்டது. உண்மையில், இதனை பெற நாங்கள் தகுதியானவர்களா? நம்மில் எவருக்கும் இது நடக்கலாம் என நீங்கள் நினைக்கவில்லையா? அனைத்து டாக்டர்களும் மருத்துவமனையை மூடிவிட்டால் என்ன நடக்கும்? நீங்கள் எங்கு சிகிச்சைக்கு செல்வீர்கள்?

உங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், உங்கள் மகன் அல்லது மகள், கணவன், மனைவி, பெற்றோர்கள் கூட அருகில் வரமாட்டார்கள். உங்களை தொட மாட்டார்கள். இது உண்மை. ஆனால், நாங்கள் உங்களை கவனித்து கொள்வோம். சிகிச்சை அளிப்போம். இது போன்று, சமூகமாக இதனை நீங்கள் எங்களுக்க திருப்பி அளிக்க வேண்டும். மனிதநேயம் இறந்துவிட்டது. அது புத்துயிர் பெற வேண்டும். உங்களுக்கு நாங்கள் வேண்டும். தயவு செய்து, எங்களை தாக்க வேண்டாம். உங்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.