'காஃபி டே சித்தார்த்தா வீட்டில் கெட்டிமேள சத்தம்'... '24 வயதில் பல கோடிகளுக்கு அதிபதி'... மருமகளாகும் ஐஸ்வர்யா!
முகப்பு > செய்திகள் > இந்தியா'காஃபி டே' என்ற இந்தியாவின் பெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி, சாதாரணமாக அமர்ந்து ஒரு காஃபியை குடிக்கலாம், அதற்குப் பல மணி நேரம் நாம் செலவிடலாம் என்ற கான்செப்ட்டை உருவாக்கியதோடு, அதற்குப் பின்னல் பல கோடி புரளும் வணிகத்தை உருவாக்கிச் சாதித்துக் காட்டியவர் வி.ஜி.சித்தார்த்தா. ஆனால் கடன் தொல்லை மற்றும் வேறு பல காரணங்களுக்காகக் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

ஆனால் அவரது மரணத்தில் பல்வேறு சர்ச்சைகளும், மர்மங்களும் இருப்பதாக இன்று வரை சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் அவரது மறைவு என்பது பெரும் இழப்பாகவே பார்க்கப்படுகிறது. சித்தார்த்தாவின் மறைவால் கடும் துயரத்திலிருந்த குடும்பத்தில் தற்போது கெட்டிமேள சத்தம் கேட்கப் போகிறது. சித்தார்த்தாவின் மகன் அமர்த்தியா ஹெக்டேவுக்கும், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரும், அரசியல்வாதிகளிலேயே பெரும் பணக்காரர் எனக் கூறப்படும் டி.கே.சிவகுமாரின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளது.
டி.கே.சிவக்குமாரும், சித்தார்த்தாவும் நீண்ட கால நண்பர்கள். சித்தார்த்தாவின் மாமனாரான கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் நெருங்கிய உதவியாளராகவும், குடும்ப நண்பராகவும் இருந்து வருகிறார் சிவக்குமார். எஸ்.எம்.கிருஷ்ணா மூலம் இருவரும் நண்பர்களாகினர். இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இவர்களின் நட்பு தொடர்ந்தது. இதனிடையே கடந்த 2017-ல் சிவக்குமாரின் வீட்டில் ஐ.டி சோதனை நடந்தது. இதற்கு அடுத்த இரண்டே நாளில் 'காஃபி டே' உரிமையாளர் சித்தார்த்தா வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
சித்தார்த்தா, சிவக்குமார் பிசினெஸ் தொடர்பாகப் பல பணப் பரிமாற்றங்கள் செய்ததாகக் கூறப்பட்ட நிலையில், அதுதொடர்பான ஆவணங்கள் சிவக்குமார் வீட்டில் கிடைத்ததாகக் கூறப்பட்டது. அதன் தொடர்ச்சியாகத் தான் சித்தார்த்தா வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியானது. இதனால் சிவக்குமார் வருமான வரித்துறை விசாரணைக்குச் செல்லும்போதெல்லாம் அவருடன் சித்தார்த்தாவும் சென்றார்.
இதற்கிடையே சித்தார்த்தா இறந்தபிறகு தன் நண்பரின் மகனுக்குத் தனது மகளைத் திருமணம் செய்ய முடிவு செய்து அதற்கான பேச்சுவார்த்தையில் கடந்த ஜூன் மாதம் ஈடுபட்டார். இதற்கு இரு வீட்டாரும் சம்மதிக்க, நேற்று பெங்களூருவில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிச்சயதார்த்த நிகழ்வுக்கு இரு குடும்ப உறுப்பினர்களும், நெருங்கிய அரசியல்வாதிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கர்நாடக முதல்வர் எடியூரப்பா போன்ற சிலர் நிச்சயதார்த்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
தனது தந்தையின் மரணத்தையடுத்து 'காபி டே' வியாபாரத்தை சித்தார்த்தாவின் மகனும், கல்யாண மாப்பிள்ளையுமான அமர்த்தியா கவனித்து வருகிறார். 24 வயதாகும் மணமகள் ஐஸ்வர்யா, டி.கே.சிவக்குமார் நிறுவிய பொறியியல் கல்லூரியான 'குளோபல் அகாடமி ஆஃப் டெக்னாலஜி'யை நிர்வகித்து வருகிறார்.
எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் உதவியாளராக இருந்த சிவக்குமார், இன்று அரசியலில் முக்கிய இடத்திற்கு வருவதற்கு எஸ்.எம்.கிருஷ்ணா முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. இந்த திருமணம் இரு குடும்பத்திற்கும் இடையேயான நீண்டகால உறவை மேலும் வலுப்படுத்துவதோடு, அரசியல் ரீதியாகவும் கவனிக்க வைத்துள்ளது.
