தலைவரின் ‘பேட்ட’ ஸ்டாரை அன்பால் சூழ்ந்த மும்பை மக்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிப்பில் சசிக்குமார் நடிக்கும் ‘புரொடக்‌ஷன் எண் 3’ படத்தின் ஷூட்டிங் பணிகள் மும்பையில் தொடங்கியது.

Petta star Sasikumar mobbed on Mumbai streets

அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகிவரும் இப்படத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் முக்கிய காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டு வரும் நிலையில், நடிகர் சசிக்குமாருக்கு மும்பை வாழ் தமிழ் மக்கள் காட்டிய அன்பு அவரை வியப்பில் ஆழ்த்தியது.

இது குறித்து இயக்குநர் நிர்மல் குமார் கூறுகையில், மும்பையில் கூட்ட நெரிசல் மிகுந்த பகுதியில் சசிக்குமார் சில ரவுடிகளை துரத்திக் கொண்டு ஓடி அடிப்பது போன்ற ஆக்ஷன் காட்சி படமாக்கினோம். பொது மக்களுக்கு தெரியாதவாறு மறைக்கப்பட்ட கேமராவை பயன்படுத்தி முழு காட்சியையும் படம்பிடிக்க முடிவு செய்தோம். ஆனால், சூழ்நிலை தலைகீழாக மாறியது. இதனை நிஜமான சண்டை என நினைத்துக் கொண்ட மக்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்துவிட்டனர்.

அவர்களுக்கு விளக்கமளித்துவிட்டு ஷூட்டிங்கிற்கு திரும்பும் போது, அங்கு வசிக்கும் மும்பை வாழ் தமிழ் மக்கள் சசிக்குமாரை அடையாளம் கண்டுக் கொண்டு, அவருடன் செல்ஃபி எடுத்தும், அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்கியும் சசிக்குமாரை அப்பகுதி மக்கள் அன்பால் நெகிழச் செய்தனர். இதனை கொஞ்சமும் எதிர்ப்பார்க்காத சசிக்குமாருக்கு சில நிமிடம் பேச்சே வரவில்லை என கூறியுள்ளார்.

மும்பையில் 15 நாட்கள் ஷூட்டிங் நடத்த படக்குழு திட்டமிட்டிருக்கும் படக்குழு, ஏற்கனவே முதற்கட்ட ஷூட்டிங்கை சென்னையில் முடித்திருக்கிறது. ‘சலீம்’ திரைப்படத்தில் இயக்குநர் நிர்மல் குமாருடன் பணியாற்றிய கணேஷ் சந்திரா ஒளிப்பதிவும், ஆனந்த மணி கலையும், சக்தி சரவணன் சண்டைப்பயிற்சியும் கவனிக்கின்றனர். முன்னணி இசையமைப்பாளர் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, நாயகி மற்றும் இசையமைப்பாளர் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.